ஓயாமல் ஒலிக்கும் -உன்
கொலுசு சப்தங்களில்
நீ குளித்து முடிந்த பின்னே -உன்னை
அழுக்காக்கிய சில காலை பொழுதுகளில்,
எனக்கான பணிவிடைகள் செய்து -நீ
பட்டுக்கொள்ளும் ஆத்ம திருப்திகளில்,
உணவோடு சேர்த்து நீ பரிமாறும்
உன்னத அன்பினிலே
என் வேலைகளின் நடுவே நீ செய்யும்
தொலைபேசி தொல்லைகளில்,
எனக்கான உன் காத்திருப்புகளில்,
என் வண்டி சப்தம் கேட்டதுமே
ஓடி வந்து எட்டி பார்க்கும்
உன் எதிர்பார்ப்புகளில்,
தினமும் நீ சொல்லும்
i love u என்கிற வார்த்தைகளில்,
நேற்று படித்து பாதியில் வைத்த
புத்தகத்தை ஒளித்துவைத்து -நீ
செய்யும் குறும்புகளில்,
அடிக்கடி வரும் என் ஒற்றை தலைவலிக்கு
தைலம் தடவும் உன் பூவிரல் ஸ்பரிசங்களில்,
அதிக புத்தக வாசிப்பே என் பார்வை குறைவுக்கு
காரணம் என்று மருத்துவர் கூறியபோது -நீ
வெடித்துக் கதறிய அக்கறையில்,
ஏறத்தாழ நம் எல்லா விவாதங்களிலும்
வேண்டுமென்றே தோற்றுப்போகும்
உன் பெருந்தன்மைகளில்,
கோபம் தலைக்கேறிய சில நேரங்களில்
உன்னை கைநீட்டி அடித்துவிடும்-என்
கோழைத்தனத்தை பொறுத்துக்கொள்ளும் -உன்
சகிப்புத் தன்மைகளில்,
காமம் வடிந்த பின்பு நீ பொழியும்
காதல் முத்தங்களில்,
உன் கர்ப்ப கால வேதனைகளில்,
பிரசவ அறையில் நுழையும்போது
"எனக்கு ஏதாவது ஆச்சுன்னா
நீ வேற கல்யாணம் பண்ணிக்க"என்று கூறி
நீ சிந்திய கண்ணீர்த்துளிகளில்,
இதுபோல எத்தனையோ தருணங்களில் ,,
இதுபோல எத்தனையோ தருணங்களில்,
நான் உணராத உன் காதலை,
உன்னோடு பேசிச் சிரித்த நம் அறையில்-நான்
தனிமையாய் இருக்கும்போதும்,
உன்னையே சுற்றிச்சுற்றி ஓடும் நினைவுகளில்
உறங்காமலே விடிந்துபோன சில இரவுகளிலும்,
முதல் முறையாய் அனுபவிக்கும்-இந்த
மூன்றுமாத பிரிவில் அதிகம் உணர்கிறேனடி...
i miss u...
No comments:
Post a Comment