Friday, 29 January 2016

காசில்லாதவர்கள் சாகத்தயாராகுங்கள்..(05.05.2014)

கடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் அவரது உறவினர் மகனை நாய் கடித்துவிட்டதாக பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அரசு மருத்துவமனையில் வெறிநாய்கடிக்கு மருந்து இல்லை என்றும் வெளியில் இருந்து வாங்கிவரச் சொன்னதாகவும் கூறினார், மேலும் அரசு மருத்துவமனையின் சேவைக்குறைபாடு, சுகாதாரக்குறைபாடு பற்றியெல்லாம் 'சமூக அக்கறையோடு' வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டார். அரசின் வசமிருக்கும் பொதுத்துறைகளின் தரம் இப்படித்தான் இருக்குமென்றும் தனியார் மயமே அனைத்துக்கும் தீர்வு என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது அவரிடம் நான் "உங்களிடம் வெளி மருந்துக்கடைகளில் மருந்துகள் வாங்கும் வசதி இருப்பதால் வாங்கினீர்கள்,அந்த வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். ""அட என்னங்க நீங்க இந்தக்காலத்துல 350 ரூபாய் கூட செலவு பண்ண முடியாதவங்க இருப்பாங்களா?" என்றார். அவரது சமூக புரிதலின் அளவுகோல் இப்படித்தான் இருந்தது.


"நாய்க்கடிக்கு நான்கு முதல் ஐந்து ஊசிகள் வரை போட்டுக்கொள்ளவேண்டும் அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்யத் தகுதியுள்ளவர்கள் மட்டுமே உயிர் வாழத் தகுதி உடையவர்கள். அப்படி செலவழிக்க இயலாதவர்கள் செத்துப்போய் விடலாமா? மனித உயிர்களின் விலையை நிர்ணயிக்க இவர்களுக்கு யார் உரிமைகொடுத்தது?" என்றேன்.


"நீங்க உடனே அமெரிக்க சூழ்ச்சி, பன்னாட்டு நிறுவனங்கள் சதின்னு பேச ஆரம்பிச்சுருவீங்களே" என்றார்.கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பெரும்பாலானவர்களின் புரிதலின் அளவுகோல் இந்த ரீதியில் தான் உள்ளது.


இந்த நாய்க்கடி மருந்துக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் இடையில் இழையோடும் அரசியல் குறித்தும் இந்திய ஏழை மக்களின் உயிரின் விலையை நிர்ணயிக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் லாப வெறியையும் அம்பலப்படுத்தும் முயற்சியே இப்பதிவு.


உலகில் கண்டறியப்பட்ட நோய்களிலேயே மிகக் கொடுமையான நோய் எதுவென்று கேட்டால் நம்மில் பலர் உடனே எய்ட்ஸ் என்று கூறுவார்கள் ஆனால் அதை விட கொடுமையான நோய் இந்த வெறிநாய்க்கடி(ரேபிஸ்) நோய் என்பதுதான் உண்மை. நோயின் அறிகுறிகள் தென்பட்ட பிறகு இதை குணப்படுத்த வழியே இல்லை. இப்போது  போடப்படும் மருந்துகள் கூட நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் தானே தவிர நோயைக் குணப்படுத்தும் மருந்து அல்ல.


வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய், பூனை போன்றவை கடிக்கும் போது இந்த நோய் உண்டாகிறது.அத்தகைய விலங்குகளிடமிருந்து பரவும் வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். இந்த வகை வைரஸ் நமது உடலில் ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு அனுக்கலான வெள்ளை அணுக்களுக்கு தெரியாமல் மத்திய நரம்பு மண்டலத்தில் சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்,


கொடுமை என்னவெனில் இந்த நோய் முற்றும் வரை அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. நோய் முற்றிய பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த  ஓரிரு நாட்களிலேயே மரணம் ஏற்பட வாய்ப்புண்டு.  


இந்த வைரஸ்கள் துவக்கத்தில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். ஒருகட்டத்தில் மூளை செல்களின் தன்மையை மாற்றி மூளை வீக்கத்தை ஏற்ப்படுத்துகிறது.மூளை நமது கட்டுபாட்டை இழந்து தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறது, உடல்வலி, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும்.வாயிலிருந்து எச்சில் அதிக அளவு வழிந்துகொண்டே இருக்கும் . அந்த எச்சிலில் கோடிக்கணக்கான வைரஸ்கள் வெளியேறிக்கொண்டிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். ஒரு கட்டத்தில் கோமா நிலையை அடைந்து  இறுதியில் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகையில் மரணம் நிகழ்கிறது.


இதுபோன்ற கொடிய வியாதியிலிருந்து நம்மை காக்கும் மருந்தில் பன்னாட்டு அரசியலைக் காண்போம்.இந்த நோய்க்கான மருந்தை 1885 இல் லூயி பாஸ்டர் கண்டறிந்தார்,அந்த மருந்தை மனித உயிர்களின் மேல் பரிசோதிக்க அவர் மிகுந்த தயக்கம் கொண்டார் காரணம் மனித உயிர்களின் மீது அவர்க்கிருந்த அக்கறையும், மனிதாபிமானமும் தான். அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை இன்று லாபவெறி பேய்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சியுடன் மனித உயிர்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆட்டின் மூலையில் ராபிஸ் கிருமியை செலுத்தி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 'நரம்புத் திசு தடுப்பு மருந்து' இந்தியாவில் ரூபாய் 4 க்கு கிடைத்துக்கொண்டிருந்தது.வழக்கமாக தொப்புளைச் சுற்றிலும்  போடுவார்களே அந்த வகை மருந்து இது.


உலக சுகாதார நிறுவனம் திடீரென்று இந்த வகை மருந்துகள் பக்கவிளைவை ஏற்ப்படுத்துவதாகக் கூறி இந்த மருந்துகளை தடை செய்யவேண்டுமென இந்தியாவை நிர்பந்தித்தது.(இந்த உலக சுகாதார நிறுவனமென்பது பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் ஊதுகுழல் அதாவது அல்லக்கை என்பது குழந்தைக்கு கூட தெரியும்.)


அவ்வாறு அந்த மருந்தை தடை செய்வதற்கு உ சு நிறுவனம் கூறிய காரணம் தான் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.அதாவது இந்த ஊசியைப் போட்டுக்கொண்டவர்களில் 1600 பேர்களில் ஒருவருக்கு அரிப்பு, தசைப்பிடிப்பு, மயக்கம் போன்ற பக்கவிளைவு ஏற்படுகிறதாம், இந்த ஊசி போட்டுக்கொண்டஒன்னரை லட்சம் பேர்களில் ஒருவருக்கு மரணம் நிகழ்கிறதாம் எனவே இது தரமற்ற மருந்து எனவே இதை தடை செய்துவிட்டு மனித திசுக்களிலிருந்து நவீன முறையில் தயாரிக்கப்படும் பன்னாட்டு நிறுவங்களின் தரமான (எனவே விலை உயர்ந்த)  மருந்தைப் பயன்படுத்தும்படி அன்பாக!? கட்டளை இட்டது. இந்த மருந்தின் விலை ரூபாய் 350 லிருந்து 750 வரை.(புது தில்லியின் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அகர்வால் இந்த வகை புதிய மருந்துகளும் அந்தப் பழைய மருந்துகள் போலவே பக்கவிளைவுகள் ஏற்ப்படுத்துகின்றன,என்கிறார்)


இந்த உலக சுகாதார நிறுவனத்திற்கு அப்படி நமது இந்திய மக்களின் மீது என்ன திடீர் கரிசனை என்று மண்டையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் உலக அளவில் வெறிநோய் பாதிப்பு இந்தியாவில் மட்டும் 80 சதவிகிதம்.அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 35 லட்சம் பேர் ஆட்டுமூளைத் திசு தடுப்பு மருந்து மூலம் சிகிச்சை பெற்றுவந்தனர், இந்த 35 லட்சம் வாடிக்கையாளர்களை (நோயாளிகளை) பெற்று, அவர்களுக்கும் பன்னாட்டு மருந்துகளை பயன்படுத்தினால்  அந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் கொள்ளை லாபம் அடைய முடியும் .இதற்காகத் தான் இந்த உ.சு. மையத்தின் இந்திய மக்களின் மீதான திடீர் கரிசனத்துக்கு காரணம்.


காலப்போக்கில் இந்த வகை பன்னாட்டு மருந்துகளை இந்திய அரசு நிறுவனமான மனித உயிரியல் கழகம் தயாரித்தது, ஆனாலும் இதற்கான மூலப்பொருள்களுக்கு அமெரிக்கா,பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பி இருக்கவேண்டியதானது. இந்த மனித உயிரியல் கழகம் தயாரிக்கும் மருந்தை அரசு, ரூபாய் 138 க்கு பெற்று அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டது, (ஆனாலும் இந்த இழப்பு வரிகள் போன்ற வேறு வடிவங்களில் மக்களாகிய நம்மிடம் தான் வசூலிக்கப்பட்டு ஈடுசெய்யப்படும் என்பது வேறு கதை.) 


.2005 இல் அமுலுக்கு வந்த அறிவுச் சொத்துடைமை விதிகள் ஒப்பந்தம் மூலமாக இந்த வாசலையும் அடைத்து அரசு நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்திய பெருமை!? நமது  சின்ன அய்யா அன்புமணி ராமதாசையே சேரும்.அதன் பிறகு ஒட்டு மொத்த இந்திய சந்தையையும் சைடாஸ்   காடிலா,அவந்திஸ் பாஸ்டர்,அவச்திஸ் பார்மா, ஆகிய மூன்று ஏகபோக நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டன. இந்த வகை மருந்துகளின் ஏகபோக உற்பத்தியாளர்கள் இவர்கள் மட்டுமே, இவர்களே மருந்தின் விலையை அதன் மூலம் இந்திய மக்களின் உயிரின் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது தான் இப்போதைய நிலை.அதாவது இப்போது ஒவ்வொரு வெறிநோய் பாதித்த இந்தியனின் உயிரின் விலை ஒரு ஊசியின் விலை ரூபாய் 350வீதம் ஆறு ஊசிக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்.ஆக இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்ய முடியாதவர்கள் சாகத் தயாராகுங்கள் என்பது தான் இந்த நிறுவனங்களும் நமது(!?) அரசும் நமக்கு சொல்ல வரும் செய்தி.


தெருவில் திரியும் வெறிநாய்க்கடிக்கு மருந்து போட்டு விடலாம் தேசத்தைக் குதறும் லாபவெறி நாய்களை என்ன செய்யப்போகிறோம்???


பங்களா நாய்களால் பாதுகாக்கப்படும் வர்கத்தை தெருநாய்கள் கடிக்க வாய்ப்பில்லை,ஏழை நடுத்தர உழைப்பாளி வர்க்க மக்களின் உயிரை தெருவில் திரியும் வெறிகொண்ட நாய்களிடம் இருந்து மட்டுமல்ல நமது தேசத்தைக் கடித்துக் குதறும் இதுபோன்ற பன்னாட்டு வெறிநாய்க் கடியிலிருந்தும்,அதற்க்கு துணைபோகும் எலும்புத்துண்டுக்கு அலையும் இந்திய அதிகாரவர்க்க நாய்களையும் அடித்து விரட்ட புரட்சிகர அரசியலைப் புரிந்துகொண்டு புரட்சிகர  அமைப்புகளின் பின்னே உழைக்கும் வர்க்கமாய் அணி திரள்வோம் . வெறி நாய்க் கூட்டங்களை விரட்டி அடிப்போம்...

No comments:

Post a Comment