Tuesday, 26 April 2016

சைத்தான் பேசுகிறேன்.. (29.07.2011)

அதிக வேலைப்பளுவின் மத மதப்பிலும் அதிகாலை பொழுதின்  குளுகுளுப்பிலும் என்னை தழுவியபடி தூங்கும் என் குழந்தையின் கதகதப்பிலும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தேன் ,

''என்னங்க எந்திரிங்க ஜமாத்திலிருந்து ஆளுங்க வந்திருக்காங்க '' என்று என் மனைவி என்னை எழுப்பினார். ஜமாத்தார்கள் என்பவர்கள் இஸ்லாமிய மார்கத்தின் மேன்மையை பற்றிய விளக்கம் கொடுக்க எல்லா இஸ்லாமியர் வீடுகளுக்கும் சென்று உரையாடுபவர்கள் . அன்று என் தந்தையை சந்திக்க வந்திருந்தனர் (என் தந்தை மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர்).

நானும் எழுந்து முகம் கழுவிவிட்டு மரியாதை நிமித்தமாக என் தந்தையோடு உரையாடிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு எதிரே அமர்ந்தேன். வந்திருந்தவர்களில் ஒருவர் நான் அணிந்திருந்த தங்க சங்கிலியை பார்த்துவிட்டு ”இஸ்லாத்தில் ஆண்கள் தங்கம் அணிவது ஹராம் (தடை செயப்பட்டது). அதை அணிவது தவறுஇனிமேல் அதை அணியாதீர்கள்” என்றார்.

என்னடா இது காலையிலேயே வாயை கிளருகிறார்களே என்று நினைத்தாலும்,சரி என்பது போல சிரித்தபடி தலையாட்டினேன். பேச்சை மாற்றுவதற்காக என் மனைவியிடம் வந்தவர்களுக்கு தேநீர் தரும்படி கூறினேன் .

தேநீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்த அவர் ,குடித்து முடித்தவுடன் என் வீட்டு show case இல் இருந்த என் மகளின் புகைப்படங்களை பார்த்துவிட்டு இஸ்லாம் உருவங்களை வீட்டில் வைப்பதை தடை செய்திருக்கிறது (ஹராம்) என்று கூறி ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தார் .நான் அதற்க்கும் சரி என்பது போல தலையாட்டினேன்

ஆனாலும் அவர் விடுவதாக இல்லை ”எல்லாம் புரிந்து பேசாமலிருப்பது ஒருவகை , எதுவுமே புரியாமல் பேசாமலிருப்பது ஒரு வகை , நீங்கள் பேசாமல் இருக்கிறீர்  நீங்கள் எந்த வகை என்று கேட்டார் .

நான் இரண்டாவது வகை என்றேன்.

அவர் எதையோ சாதித்து விட்டது போல பெருமிதத்துடன்.. ”உங்களுக்கு என்ன புரியவில்லை கேளுங்கள் உங்கள் சந்தேகங்களை நான் தீர்க்கிறேன்” என்றார் .

நான் இரண்டு கேள்விகளை கேட்டேன்

1 . தங்கம் அணிவது ஹராம் என்று குர்-ஆனில் ஒரு வசனம் எந்த இடத்திலும் இல்லையே என்றேன் (நான் குர்-ஆண் படித்திருக்கிறேன்) முதலில் தடுமாறிய அவர் பிறகு சுதாரித்துக்கொண்டு அது குர்-ஆனில் இல்லை ஒரு இறைதூதர் சொன்னது என்றார். அப்படியானால் இறைவன் தடை செய்யாத ஒன்றை இறைதூதர் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டேன் .     இறைவன் விசயத்தில் விதண்டாவாதம் செய்பவர்கள் நாக்கு நரக நெருப்பில் பொசுக்கப்படும் என்றார்

2 .உருவம் என்பது ஹராம் என்றால் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை நாட்களில் வசூல் செய்யும் பொது காந்தி உருவம் போட்ட ரூபாய் நோட்டுகளை  ஏன் வாங்குகிறீர்கள் என்று கேட்டேன்.

அமைதியை போதிக்க வந்தவர் இப்போது ஆவேசமாகிறார். கருணையை போதிக்க வந்தவர் இப்போது கோபமாகிறார்.

இதையெல்லாம் நீ பேசவில்லை உன் தலையில் அமர்ந்துகொண்டு சைத்தான் பேசுகிறான் என்று கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டார்.


காலம் காலமாக நம்ப வைக்கப்படும் நம்பிக்கைகள், கேள்விகள் கேட்கும் போது காணாமல் போய் விடுகின்றன...

29.07.2011

1 comment:

  1. தங்கம் அணிவது ஹராம்தான்
    அதைவிட ஹராம் மொபைல் வைத்திருப்பது
    ஏன் என்றால் மனித ஆண் பெண் உடலமைப்புகள்
    உடற்கூறு அமைப்புகள், உடலின் ஸ்டாடிக் கரண்ட் ஓடும் நடைமுறைகள் ஆகியவற்றை நீங்களே தேடிப்பார்த்து விசய ஞானம் அடைந்து கொள்ளவும்.

    அதுபோல் நிலையாக உள்ள உருவப்படத்தினாலும்
    நிலைமாறிக்கொண்டிருக்கும் உருவப்படத்தினாலும்
    நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே தேடிபார்த்துக்கொள்ளவும்.
    ரூபாய் நோட்டுக்களை யாரும் பள்ளிவாயில்களில் ஃபிரேம் அடித்துமாட்டுவதில்லை.

    நன்றி...

    ReplyDelete