பச்சிளங் குழந்தையொன்று
பதறி அழுகிறதென்றான் ’அவன்’..
அடடா கவிதையென்று
மெச்சிக்கொண்டார்கள் ‘அவர்கள்’...
பசிமயக்கம் கண்கள் சூழ
பச்சிளங் குழந்தையொன்று
பதறி அழுகிறதென்றான் ’அவன்’.
”ப்ச்.. கழிவிறக்கம் இதுவன்றோ"வென
குதூகலித்தார்கள் ‘அவர்கள்’..
ஸ்தூலமான துக்கப் பிரழ்வில்
ஹாஸ்யங்களின் பெருவெளியில்
பிச்சைக்காரியின் புடவை விலக
பீப் பீப் பீப்… பீப் பீப் பீப்
பூனைக்குட்டி வெளியே செல்ல
பச்சிளங் குழந்தையொன்று
பதறிஅழுததென்றான் ‘அவன்’...
நவீனக் கவிதையென
நாக்கைச் சப்பினார்கள் ‘அவர்கள்’....
தனக்கான உணவை
வல்லூறுகள் தட்டிப்பறிக்க
பச்சிளங் குழந்தையொன்று
பசியாலே அழுகிறதென்றான் ’அவன்’.
”இவன் கம்யூனிஸ்ட்டா இருப்பானோ..”
மூக்கைச்சிந்திக்கொண்டு
முனுமுனுத்தனர் ’அவர்கள்’...
வல்லூறுகளை விரட்டியப்போம்
குழந்தைகளின் பசியாற்றுவோம்
நமது உணவு நமக்கே சொந்தம்
அழுதது போதும்
அணிதிறள்வீரென்றான் ’அவன்’…
”அய்யோ.. இலக்கியத்தில் அரசியல் பேசலாமா..”
நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு
பதறியழுதார்கள் ’அவர்கள்’…
’அவர்கள்’ வல்லூறுகளின்
கள்ளச் சேவகர்களென்பது
’அவனு’க்குத் தெரிந்துவிட்டது – பாவம்
’அவர்களு’க்கு இன்னும் தெரியவில்லை...
No comments:
Post a Comment