“தம்பி..!! இன்னொரு ப்ளேட் சில்லி குடுப்பா…” மண்டைக்கு ஏறிய குருமாவின் காரத்தால் “சொர்ர்ர்ர்…” என்று மூக்கை உரிஞ்சிக்கொண்டே ஹோட்டல் ஊழியரிடம் கேட்டான் மருதாசலம். சிறிய கடைதான் என்றாலும் திருப்பூரில் பிரியாணி என்றாலே பாபு பிரியாணிக் கடைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பிரபலமான கடை. நானும் என்னுடைய நன்பர்கள் குட்டி மற்றும் மருதாசலமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் மின்சாரமும் இல்லாததால் சொதசொதவென்று வியர்த்து ஊற்றியது.
தீவிர பிரியாணிப் பிரியனான (வெறியனான) மருதாசலம் ஒரு குடும்பமே திருப்தியாக சாப்பிடக்கூடிய அளவு உணவை ஒற்றை ஆளாக ஈவு இரக்கமின்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோழியின் குடல் குண்டாமணி தவிற மற்ற அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்து ‘காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி’ கொலைவெறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது கொலைவெறிக்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த விருந்துக்கு ஆகும் செலவை நானும் குட்டியும் மட்டும்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ’புரிந்துணர்வு’ ஒப்பந்தப்படி முடிந்த அளவுக்கு எங்களுக்கு அதிகமாக ’செலவு’ வைத்திடும் முயற்சியில் முக்கிக்கொண்டிருந்தான்.
முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிட்ட நானும் குட்டியும் கடைக்கு வெளியில் மருதாசலத்துக்காக காத்திருந்தோம். நான் இரண்டே முக்கால் சிகரட்டை ஊதி முடித்திருந்தேன், குட்டி அரைப்பாக்கெட் ஹான்ஸை மென்று துப்பியிருந்தான். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு இரைவிழுங்கிய மலைப்பாம்பைப்போல நெளிந்துகொண்டே வெளியே வந்தான் மருதாசலம். கை கால்கள் முளைத்த ஒரு எழுபத்தைந்து கிலோ அரிசி மூட்டைக்கு கட்டம் போட்ட சட்டை போட்டதுபோல இருந்தான்.
ஆள் பார்ப்பதற்கு ’மலைமாடு’ போல இருந்தாலும் குழந்தை மனசு. குழந்தை மனசு என்றால் நிஜமாகவே குழந்தை மனசுதான். ஒரு பதினெட்டு வருடம் முன்பு வரை பள்ளிப்பருவத்தில் எங்களுக்கு ஆண்டிபாளையம் வாய்க்காலில் சென்று குளிப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக் கிழமையும் எங்கள் முழு பொழுதும் வாய்க்காலில் தான் கழியும். இந்த ’மலைமாடு’ செய்த ஒரு காரியத்தால் அதற்குப்பிறகு நாங்கள் வாய்க்கால் பக்கம் தலைவைத்துகூட படுக்க முடியாமல் ஆகிப்போனது.
வழக்கமாக மதியம் சாப்பாடு பார்சல் வாங்கிவந்து வாய்க்கால் கரையில் வட்ட வடிவில் கும்பலாக அமர்ந்து ஒருவரையொருவர் கேலி செய்துகொண்டே சாப்பிடுவது வழக்கம். அது ஒரு மறக்கமுடியாத ஞாயிற்றுக்கிழமை. அன்று மதிய உணவாக பிரியாணி பார்சல் வாங்கி வரப்பட்டது. குளித்த ஈரத்துடன் அனைவரும் வழக்கம்போல வாய்க்கால் கரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். எல்லோரும் சார்ட்ஸ் அணிந்திருந்தோம். நம்ம மருதாசலம் அன்று போட்டிருந்த தொளதொளவென்ற அவரது தாத்தா காலத்து ’பட்டாபட்டி’ குளிக்கும்போது வாய்க்கலோடு போய்விட, உடல் துடைக்க கொண்டுவந்திருந்த துண்டை இடுப்பில் கட்டியிருந்தார்.
மருதாசலம் மும்மரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் என்கிற ஒரு நண்பன் விளையாட்டாக திடீரென்று மருதாசலத்தின் இலையிலிருந்த லெக்பீசை எடுத்துக்கொண்டு ஓடினான். லெக்பீஸ் பரிபோன கோபத்தில் மருதாசலம் ராமனைத் துரத்திக்கொண்டே ஓடினான். ஓடும்போது அவனது இடுப்பிலிருந்த துண்டு கழன்று விழுந்தது. “ நமக்கு எது முக்கியம், சோறா…? சொரணையா…?” என்று சிந்தித்த(!?) மருதாசலம் லெக்பீஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்து அப்படியே ஒட்டுத் துணியில்லாமல் ராமனை விரட்டிச் சென்றான். பட்டப்பகலில் ஒரு ’பிட்டுப்படம்’ அங்கே ஓடிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த ராமன் ’அதிர்ச்சியில்’ லெக்பீசை கரையில் வைத்துவிட்டு வாய்க்காலில் குதித்து உயிர் பிழைத்தான். (அடுத்த நாளிலிருந்து ராமன் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் விழுந்து, முத்தையன் கோவில் பூசாரியிடம் ’செறகடித்த’ பின்னரே குணமானான் என்பது வேறுகதை). இப்படி மருதாசலம் ”டங்..டங்..டங்…” என்று ஓடிவருவதைப் பார்த்து பக்கத்தில் கருவேல மரத்தில் கட்டியிருந்த பசுமாடு ஒன்று மிரண்டு போய் கயிரை அறுத்துக் கொண்டு ”திப்புறு… திப்புறு…”வென்று காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இந்தக் கன்றாவியை பார்த்த அந்த வழியே சென்ற உள்ளூர் பெண்கள் ஊர்க்காரர்களிடம் போய் சொல்லிவிட, இரண்டு உள்ளூர் ஆட்கள் வந்து மருதாசலத்தை ’மானங்கெடத்’ திட்டிக்கொண்டிருந்தார்கள். நங்க தான் பத்து பணிரெண்டு பேர் இருக்கோமே..!! வந்த ஊர்க்காரர்கள் இருவரிடமும் நாங்கள் வீர வசனம் பேசி பில்டப் கொடுக்க அவர்கள் பயந்துபோய் ஓடிவிட்டனர்.
போனவங்க ஒன்னும் சும்மா இருக்கல, ஒரு ஐம்பது பேர கூட்டிட்டு தடிக் கம்போட திரும்பி வந்தானுக. அதப் பாத்து துண்டக் காணோம் துணியக் காணோம்னு எல்லாரும் எடுத்தோம் பாருங்க ’ரேசு…’ சும்மா பிச்சுக்கிட்டு ஓடினோம். எல்லாருமே ’சிங்கிள் பீஸ்’ உடையில் செக்சியாக வேறு இருந்ததால் பஸ்லயும் ஏற முடியல. வழியில நாயெல்லாம் கன்னா பின்னான்னு தொரத்துச்சு. ’பிளாக் ஹாக் டவுன்’ பட கிளைமேக்ஸ்ல அமெரிக்க ரானுவ வீரர்கள் ஓடுவாங்க பாருங்க, அந்த மாதிரி ஓடினோம். ”இதென்னடா ’டாப்லெஸ்’ மராத்தான் ரேஸ் மாதிரி ஓடரானுக..?” ன்னு ஊரே வேடிக்கை பாத்துச்சு. வெக்கமே படாம அப்படியே ஒரே தம்முல ஓடி வீட்டுக்கு வந்துதான் நின்னோம். அதோட சரி இன்னைக்கு வரைக்கும் வாய்க்கால் பக்கமே போகல. மருதாசலம் எப்படிப்பட்ட ஒரு பிரியாணி வெறியன்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.
இன்றைய ’புரிந்துணர்வு’ ஒப்பந்துத்துக்கும் ஒரு கதை இருக்கு. காலைல குட்டியோட கடைல மூனுபேரும் தெண்டமா உக்காந்திருந்தோம். அப்போ அந்த வழியா ஒரு நடுத்தர வயது பெண் ”கைரேக… ஜாதகோ… ஜோஸ்யம் பாக்கறதே… “ னு கத்திட்டு போச்சு. நம்ம ஆளு ஜோசியத்துல அபரிமிதமான நம்பிக்கை உள்ளவர். ’சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த’ கதையா, மருதாசலம் அந்த ஜோசியகார அம்மாவ உள்ள கூப்பிட்டாரு. ஆச்சா…!!
“நல்லா கைரேக பாப்பீங்களா..?” ன்னு மருதாசலம் கேட்டதுக்கு ”என்ன சாமி இப்பிடி கேட்டுட்டீங்க… நாங்க பாளையங்கோட்ட காரவங்க… கட்டபொம்ம பரம்பர… எங்க வாக்கு பொய்க்காது..” என்று கூறிக்கொண்டே வந்து ஒரு துண்டை விரித்து அதில் அமர்ந்தார். மனதுக்குள் ”இன்னிக்கு ஒரு அடிம சிக்கிடாண்டா…” என்று நினைத்திருக்கும் போல, வாயெல்லாம் ஒரே புண்ணகை. கைரேகை பார்ப்பதற்கு இருபத்தி ஒரு ரூபாய் என்று ஊதிய ஒப்பந்தம் செய்துகொண்டு வேலையைத் துவங்கினார் அந்தப்பெண். அது ஒர்க்சாப் தரை என்பதால் மருதாசலம் ஒரு பழைய செய்தித்தாளை விரித்து அதில் ’பப்பரப்பே..’ ன்னு பரப்பிட்டு அமர்ந்தார். கீழ உக்காந்தா பேண்ட் அழுக்காயிரும்னு தெரியர அளவுக்கு அவருக்கு பகுத்தறிவு வேல செஞ்சிருக்கு, சந்தோசம்..!!
நம்ம ஆளோட பேரு வயசு எல்லாம் கேட்டு தெறிஞ்சுட்டு, கைய புடிச்சு ரேகையும் பாத்துட்டு நம்மாளப் பாத்து சோகமா ஒரு லுக்கு விட்டுச்சு அந்தம்மா. அப்புறம் கண்ண மூடி ஏதேதோ சாமியெல்லாம் கூப்பிட்டுச்சு. கடைசியா “ஜெய் ஜக்கம்மா… மருதாசலத்துக்கு நல்ல சேதி சொல்லும்மா..”ன்னு சொல்லி, ’ஸ்பின் பௌலிங்’ போடற மாதிரி கைய ரெண்டு தடவ சொழற்றி ’சோலி’ய சொளேர்னு உருட்டுச்சு. ஆறு விழுந்தது.
“ஆறு நட்டம்…”
சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினார் அந்தப் பெண். நம்ம ஆளு மூஞ்சி டக்குனு சோகமாயிடுச்சு. மறுபடியும் கண்களை மூடி ஜெய் ஜக்கம்மா.. சொல்லி இன்னொரு பௌலிங். இப்போ நாலு விழுந்துச்சு.
“நாலும் நட்டம்…” னு சொன்னதும் நம்ம ஆளு நெஜமாவே ஃபீல் ஆயிட்டாரு.
இருக்காதா பின்ன இப்போ தான் தொழில் தொடங்கறக்கு லோனுக்கெல்லாம் அப்ளை பன்னியிருக்காரு. அம்பானிக்கு அடுத்ததாவோ, பில்கேட்சுக்கு பக்கத்திலயே ஒரு தொழிலதிபர் ஆகனும்னு ’சின்னதா’ ஒரு ஆசைல இருக்காரு. அரசியல்வாதி ஆகனும்னு ஒரு கணவு வேற இருக்கு. விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல பணக்காரனாகி எம்.எல்.ஏ.., எம்.பி னு டபக்கு டபக்குனு மேல வந்தறனும்னு ’நியாயமான’ கணவுல மெதந்துட்டு இருக்கிறவர்கிட்ட போய் ”நட்டம்… நட்டம்…” னா ஃபீல் ஆகாம என்ன பன்னுவாரு.
அடுத்ததா அந்தம்மா ஒரு ஓலைச்சுவடிய எடுத்துச்சு. நம்மஆளு கைல ஒரு சாக்கு தெக்கிற கோனூசியக் கொடுத்து. “குத்துங்க எஜமான்… குத்துங்க..” என்பது போல சைகை காட்டுச்சு. இவரு பவ்யமா கண்ண மூடி பயபக்தியா சாமியெல்லாம் கும்பிட்டுட்டு, ’சொளக்..’ ன்னு நடுவால குத்துனாரு. இவரு குத்துன இடத்துல அந்தம்மா ஓலைச்சுவடிய திறந்து காட்டுச்சு. அதுல பாம்பும் கீறியும் சண்டை போடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு.
“ஒனக்கு நாக தோசம், செவ்வா பார்வ இருக்கு… தொட்ட காரியந் தொலங்காது, ஊட்டுல சண்டையே தீராது, மொத்தத்துல நிம்மதியே இருக்காது..” ஒரே போடா போட்டுச்சு. மறுபடியும் சாமி கும்பிட்டு சொளக்குனு குத்துனாரு நம்ம ஆளு. அந்தம்மா ஓலைச்சுவடிய விரிக்க.. மருதாசலம் ஆர்வமா பாத்தாரு. அதுல ஏசுநாதர் பாவமா சிலுவையில தொங்கிட்டு இருந்தார்.
“அடுத்தவம் பன்ற பழிபாவமெல்லா ஒம்மேலதா வந்து விழுகும்..” சாபம் விடுவது போல அந்தம்மா பேசியதும் நம்மாளு மகா கடுப்பாயிட்டாரு.
“அஞ்சு வெரல இறுக்கமா மூடிட்டு ஒரு வெரல நீட்டு..” ன்னு அந்தம்மா சொல்ல நம்மாளு நடுவெரல ”டொய்ய்ய்ங்ங்…” ன்னு நீட்டினாரு.
”பாத்தியா…!! அது பாம்பு வெரலு; வெசம்..”
அந்தம்மா இன்னிக்கு எதோ ஒரு முடிவோடதான் இருக்கு போல, சும்மா அடிச்சு விடுது. நம்மாளுதான் கிடுகிடுன்னு ஆடிப்போயிட்டாரு.
“இதுக்கெல்லாம் என்ன பரிகாரம்..?” மருதாசலம் அப்பாவியா கேட்டாரு. இந்தக் கேள்விக்குதான் இவ்ளோ நேரம் காத்திருந்த மாதிரி அந்தம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம்.
“எதோ துஷ்ட்டப்பொருளால உனக்கு வெசம் ஏறியிருக்கு, நீ கையால தொடல, காலால மிதிக்கல, தாண்டிப்போனதால வந்த வெண…, ஒரு சொம்பு தண்ணியில நிருபிச்சு காட்டறேன்…அதுக்கப்புறம் உனக்கு நம்பிக்க வந்தா.. உனக்கு சம்மதம்னா பரிகாரம் பன்னித்தறேன்” நம்பற மாதிரியே பேசுது.
”அதான் அந்தம்மா ’டெமோ’ காட்டறேன்னு சொல்லுதே அப்புறம் என்ன? ட்ரை பன்னிற வேண்டியதுதான்..” மருதாசலம் ஒரு முடிவோட சரின்னு சொல்லிட்டாரு. ஒரு சொம்புல தண்ணிய எடுத்து அது பக்கத்துல ஒரு பித்தளைல செஞ்ச பாம்பு சிலை, அப்புறம் இன்னொரு சாமி சிலைய வச்சாங்க. அப்புறம் அந்தம்மாவோட ஜோல்னா பையில இருந்து சில பொருள்கள எடுத்து பக்கத்துல வச்சாங்க.
அந்த சொம்புல இருந்து ஒரு கைல கொஞ்சம் தண்ணிய அள்ளி மருதாசலத்தோட உள்ளங்கையில ஊத்தி டேஸ்ட் பாக்க சொல்லுச்சு, நம்மாளும் ’சொர்ர்ரக்’ னு மோட்டார் போட்ட மாதிரி உறிஞ்சிட்டு தண்ணி ”பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு”ன்னு சொல்ற மாதிரி மண்டைய ஆட்டுனாரு.
மூணு வெரல தண்ணிக்குள்ள வை தம்பின்னு அந்தம்மா சொன்ன மாதிரியே தண்ணிக்குள்ள வெரல வச்சு அவரோட தோள்ல இருந்து மூணுதடவ புஸ்..புஸ்..னு ஊதினாரு. அப்போ கண்ண மூடி அந்தம்மா பயங்கர பில்டப்பெல்லாம் பண்ணிச்சு. மறுபடியும் கொஞ்சம் தண்ணிய அள்ளி நம்மாளு கைல ஊத்தி “இப்போ குடிச்சு பாருன்னு..” சொல்லுச்சு. தண்ணிய குடிச்ச மருதாசலம் அப்படியே ஷாக் ஆயிட்டாரு ஏன்னா தண்ணியில விபூதி வாசம் அடிச்சுது.
“பாத்தியா உன் ஒடம்புல வெசம் இருக்கு, அதான் தண்ணி துவர்க்குது. ஆயிரத்து ஐநூறு ரூபா குடு, வெசத்த எடுத்தர்றேன்” னு கரக்ட்டா மேட்டருக்கு வந்துச்சு. நம்மாளு தான் ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஆச்சே பேரம் பேசி நூத்தம்பது ரூபாய்க்கு பேசி முடிச்சாரு. அந்தம்மா கேட்டது போலவே மூனு பச்ச எல, மூனு கல்லு, ஒரு மொழம் நூல் இந்த மூனு பொருளையும் எடுத்துட்டு வந்து நம்மாளு அந்தம்மாகிட்ட கொடுத்தாரு. அதையெல்லாம் சொம்புக்கு பக்கத்துல வச்சு, ஜிகுஜிக்கா ஜிகுஜிக்கா ஜிக்கான்னு எதேதோ மந்திரமெல்லாம் சொல்லுச்சு.
அந்த சொம்பு மேல ஒரு கர்ச்சீப் வச்சு மூடி தலைகீழா திருப்பி காட்டுச்சு. என்ன ஆச்சர்யம் ஒரு சொட்டு தண்ணி கூட கீழ சிந்தல. எனக்கே ஆச்சர்யமா போச்சு.
“பாத்தியா ஜக்கம்மா சொல்லுக்கு தண்ணி கட்டுப்பட்டிருச்சு, வெசமெல்லாம் இந்த தண்ணியில எறங்கிடுச்சு. இதக்கொண்டுபோய் மரத்துக்கு ஊத்திட்டு,திரும்பி பாக்காம வந்துடு”
அப்படின்னா ஆப்பரேசன் சக்சஸ்னு அர்த்தமாம். நல்லபடியாக நாடகக் கம்பெனியை நடத்தி முடித்த நிம்மதியில் நூற்றைம்பது ரூபாயை சுருக்குப் பைக்குள் சொருகிக்கொண்டது. அந்தம்மா வந்து உக்கார்ந்ததிலிருந்து ஆப்பரேசன் முடியும் வரை குட்டி ஜக்கம்மாவையும் மருதாசலத்தையும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான்.
“இப்போ அதே மாதிரி நானும் செஞ்சு காட்டறேன்னு குட்டி சொம்பில் தண்ணீர் ஊற்றினான், “ஜக்கம்மாட்ட வெளையாடாதே தொழில் வெளங்காது ஜாக்கிறத..” னு ஜக்கம்மாவின் ஜிங்குஜா மிரட்டியது.
“அத நான் பாத்துக்கறேன் இப்போ உங்க வேசத்த கலைக்கிறேன் பாருங்க..” என்று துனியால் சொம்பை மூடியதுதான் தாமதம். ஜக்கம்மா தலைதெறிக்க ஓடிவிட்டது. ஆனால் அப்பகூட நம்மாளு மருதாசலம் அதெல்லாம் செய்ய முடியாது அதுக்கெல்லாம் சாமியோட அருள் இருக்கனும்னு சவால் விட்டாரு. பிரியாணி பந்தயம் டீலா நொ டீலான்னு கேட்டாரு.
முதல் முயற்சி தோல்வி. இரண்டாவது முயற்சியில் குட்டியின் ’சக்தி’க்கு தண்ணீர் கட்டுப்பட்டது. முதல் முயற்சியில் தோற்றுப்போனதால் தான் இந்த பிரியாணி பார்ட்டி…
(தண்ணீரில் விபூதி வாசம் வீசக் காரணம் எதையோ தேடுவதுபோல ஜக்கம்மா அவரது ஜோல்னா பைக்குள் கையை விட்டு நக இடுக்கில் திருநீர் எடுத்திருந்தது, இரண்டாவது முறை தண்ணீரை குடிக்க கொடுக்கும்போது நகத்திலிருந்த விபூதி தண்ணீரில் கறைந்திருந்தது. ஆரம்பம் முதல் இதை வீடியோ எடுத்திருந்த நான் திருப்பி அதை போட்டுப்பார்த்தே அதை கண்டுபிடிக்க முடிந்தது.அவ்வளவு தொழில் நேர்த்தி ஜக்கம்மாவுக்கு….)
ஜெய் ஜக்கம்மா…!!
ஜெய் ஜக்கம்மா…!!
ஜெய் ஜக்கம்மா…!!...